வண்ண மால்வரையே குடையாக

வண்ண மால்வரையே குடையாக
மாரி காத்தவனே ! மதுசூதா ! *
கண்ணனே ! கரி கோள் விடுத்தானே !
காரணா ! களிறட்ட பிரானே !
எண்ணுவார் இடரைக் களைவானே !
ஏத்த அரும் பெரும் கீர்த்தியினானே !
நண்ணி நான் உன்னை நாடொறும் ஏத்தும்
நன்மையே அருள் செய் எம்பிரானே !

(பெரியாழ்வார் திருமொழி - 5-1-8)

[பொருள்]

பல வித வளங்கள் நிறைந்த பெருமை பொருந்திய கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, இந்திரன் பெய்வித்த மழையில் இருந்து ஆயர்ப்பாடி மக்கள், பசுக்கள், கன்றுகள், இன்ன பிற உயிர்களையும் காத்த கண்ணனே ! மது என்னும் அரக்கனை அழித்தவனே ! முதலையிடம் சிக்கி துன்பப்பட்ட கஜேந்திரன் என்னும் யானையின் துயரைத் தீர்த்தவனே ! (மூலக் காரணம்) ஆதிமூலம்  ஆனவனே ! தர்மத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்து வந்த கம்சன் வளர்த்த குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்றவனே ! உன்னை நினைக்கும் அடியார்கள் துன்பத்தைக் களைபவனே ! 'இவ்வளவு தான்!' என்று சொல்லி முடிக்க முடியாத எல்லையில்லாத புகழ் மிக்கவனே ! என் தலைவனே ! உன்னை நாள் தோறும் அணுகி உன் புகழ் போற்றும் நன்மையே அருள் செய்ய வேண்டுகிறேன்.

(சொற்பொருள்)

வரை - மலை (இங்கு கோவர்த்தனம்)
மால் - பெருமை; பழமை; வளமை
மாரி - மழை
கரி - யானை (இங்கு கஜேந்திரன்)
கோள் - துன்பம்
களிறு - யானை (இங்கு குவலயாபீடம்)
அடுதல் - தொலைத்தல்; அழித்தல்
ஏத்துதல் - போற்றுதல்; புகழ்தல்; வாழ்த்துதல்
நண்ணுதல் - அணுகுதல்

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com